சென்னையில், பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தம் சாலையில் போராடிய செவிலியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இரவு முழுவதும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான செவிலியர்களை உரிய காலத்தில் பணி நிரந்தரம் செய்யத் தவறிய சுகாதாரத்துறையின் அலட்சியமே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னரும் விடிய விடியப் போராட வேண்டிய சூழலுக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்னரும், செவிலியர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததோடு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் என செவிலியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் செவிலியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசும், சுகாதாரத்துறையும் முன்வர வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.




