கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஆசிரியரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதும், மனிதநேயத்திற்கு எதிரானதுமாகும். இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த மாணவி விஷம் அருந்தி உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஆசிரியர்களை வைத்து மதிக்கும் நமது சமூகத்தில், மாணவர்களுக்கு பாதுகாப்பும் நல்லொழுக்கமும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியரே இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய தவறாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவிதமான பாரபட்சமும் இன்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளை, பெண்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் தைரியத்துடனும் துணிச்சலுடனும் இருக்க வேண்டும். தங்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லை, வன்கொடுமை அல்லது அநீதியை ஒருபோதும் மறைத்து வைக்கக் கூடாது. இதுபோன்ற துயரமான சூழ்நிலையில் தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. நம்பிக்கைக்குரிய பெற்றோர், ஆசிரியர்கள், காவல்துறை, சட்ட அமைப்புகள் அல்லது உரிய அதிகாரிகளை அணுகி, குற்றம் செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும். எந்த நிலையிலும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தேமுதிக சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்த மாணவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.




