தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால் நனைந்து வீணாகும் அபாயம் குறித்து நாங்கள் கோரிக்கை மற்றும் எச்சரிக்கை செய்தோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக திடீர் மற்றும் கனமழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து கடுமையான சேதத்திற்குள்ளாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தொடர்ந்து பெய்த கனமழையால் நனைந்து சேதமடைந்துள்ளன. இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு (தம்பிபட்டி) பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் அதிகாரிகளின் தாமதமான நடவடிக்கைகளாலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல்லை அதிகாரிகள் உரிய நேரத்தில் எடைபோட்டு கொள்முதல் செய்யாததாலும், போதுமான தற்காலிக கொட்டகைகள் மற்றும் தார்பாய் வசதிகள் ஏற்படுத்தப்படாததாலும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் நீண்ட நாட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மழைநீரில் நனைந்த நெல் மணிகள் நிறம் மாறுவதுடன், முளைக்கத் தொடங்கி முற்றிலும் பயன்பாடற்ற நிலைக்கு செல்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பான கிடங்குகள் மற்றும் சேமிப்பு மையங்களுக்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளாக நாங்கள் தொடர்ந்து பல்வேறு குறைபாடுகளையும், மக்களின் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி வருகிறோம். எனினும், யார் எந்தக் கருத்தை முன்வைத்தாலும் அதனை அரசு செவிசாய்காமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல செயல்படுகிறது என்று மக்கள் இன்றைக்கு விமர்சிக்கும் நிலை வந்துள்ளது. எனவே விவசாயிகளின் உழைப்பையும் விளைபொருட்களையும் பாதுகாக்க அரசு உடனடி மற்றும் நிரந்தர தீர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.




