தீர்மானம்: 1
வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்,
தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் மிக முக்கியமான தேர்தல். 2026 ஆம் ஆண்டு அமையவிருக்கும் ஆட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ந்து, தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு, சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைய தமிழக மக்களின் நலன், மற்றும் எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக அமைய வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 2
தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், சட்டம், ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். டாஸ்மார்க் மதுபான விற்பனையை முறைப்படுத்தியும், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் அதற்கு துணைபுரிவோருக்கு கடுமையான தண்டனை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 3
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அவர்களின் பணிகளை நிரந்தரப்படுத்தி, சம ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்கி, எதிர்காலத்தில் எந்தவிதப் போராட்டங்களுக்கும் இடமளிக்காத வகையில் நிரந்தரமான தீர்வுகளை அரசு உருவாக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 4
சாதி, மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் செயல்கள் சனாதனத்திற்கும், சமூக அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கருத்துக்களை கடுமையாகத் தடுக்கவும், மதரீதியான மோதல்களை உருவாக்குவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 5
கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை ஆகும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 6
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி (NLC) நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என 10 ஆயிரம் தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகவும், கூட்டுறவுச் சங்க தொழிலாளராகவும் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக பணியில் அமர்த்த வேண்டும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்தும், இதுவரை நிர்வாகம் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு, அவர்களை உடனடியாக பணி நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும், சம வேலைக்கு, சம ஊதியம் அனைத்துத் துறை தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை சுருக்கி நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியது அனைத்து தொழிலாளர்களையும் பாதிப்பதால் மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டங்கள் திருத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 7
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசு நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் நிவாரணத் திட்டத்தின் கீழ், ரூ.3000/- பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் தரமான பொருட்களுடன் வழங்கப்பட வேண்டும். அந்தத் தொகுப்புகள் எந்த விதமான பாகுபாடும் இன்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முறையாகவும், முழுமையாகவும் சென்றடைய வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் டேப் (TAB) அனைவருக்கும் முறையாக சென்றடைய வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 8
தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, விவசாயிகளுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வரப்போகும் அரசு இருக்க வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு கொள்முதல் செய்யப்படும் கரும்பிற்கு உரிய நியாயமான விலையை தமிழக அரசே நிர்ணயித்து, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மணிகளை பாதுகாக்க, போதிய கிடங்குகளை அமைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 9
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் சமூக சேவை, அரசியல் பங்களிப்பு, திரைத்துறையில் அவருடைய சாதனைகள் மற்றும் தமிழக மக்களுக்காக அவர் ஆற்றிய மகத்தான பணிகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசிற்கு ஏற்கனவே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கையை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 10
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள், தமிழக அரசியலில் எதிர்க்கட்சி தலைவராக சிறந்த முறையில் பணியாற்றியதற்கும், மக்களுக்காக ஆற்றிய சேவைகளுக்காவும், தலைவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையிலும், தமிழக அரசு, அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில், புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு “மணிமண்டபம்” அமைத்துத் தர வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 11
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலாதா விஜயகாந்த் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.








