கடந்த 18.11.2024 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை (வயது 26) என்ற யானை தாக்கி திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த திரு.சதாசிவம் மகன் திரு.உதயகுமார் (45) என்ற உதவி பாகனும், அவரை காண வந்திருந்த அவரது உறவினர் கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டம், பலுகல் பகுதியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் நாயர் மகன் திரு.சிசுபாலன் (வயது 58) என்பவரும் உயிரிழந்துள்ளார். திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ யானை தாக்கி உயிரிழந்த திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. எனவே உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோருக்கு பெரும் தொகையை நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.
