கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும் நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு கேட்டு கடந்த 12.01.2024 முதல் 15 மாத காலமாக நெசவு கூலி உயர்வு வேண்டி பேச்சுவார்த்தை பதினாறு முறை நடந்தும், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், 14.02.2025 முதல் சுமார் 150 கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராடியும், புதிய நெசவு கூலி உயர்வு பிரச்சனையை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். மேலும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து அவர்களின் தொழிலுக்கும், வாழ்வாதாரத்திற்கும் வழி வகை செய்யவேண்டும். மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுகளை திரும்ப பெற்று, நெசவுத் தொழிலையே நம்பி வாழ்கின்ற நெசவாளர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்தும், எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
