நெல்லையில் நீதிமன்ற வாசலிலேயே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே இன்றைக்கு உலுக்கி இருக்கிறது. முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பதை உடனடியாக காவல்துறை கண்டறிய வேண்டும். நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இதுபோன்ற தொடர் படுகொலைகள் தமிழகத்தில் நடப்பது மக்கள் இடையே மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. “தமிழ்நாடா?, இல்லை, கொலை நாடா” என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. “கொலை, கொலையா, தமிழகத்தில் படுகொலைகள்” அரங்கேறும் மாநிலமாகத் தமிழகம் மாறி இருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், இந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார், இதுபோன்ற படுகொலைகளை எப்படித் தடுக்கப் போகிறார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்ந்து படுகொலைகள் நடப்பதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இனிமேலும் இதுபோன்ற படுகொலைகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
