விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஸ்டாண்டர்ட் (Standard) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தால் 3 பேர் உயிரிழந்து, பலபேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து என்பது விருதுநகர் மாவட்டத்திற்கே ஒரு சாபக்கேடாக உள்ளது. பலமுறை இந்த விபத்துகள் நடந்தபோதும் பலமுறை அறிக்கைகள் கொடுத்தும், தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றும், எந்த விதமான முன்னேற்றமும் நடைபெறவில்லை. தமிழக அரசு பட்டாசு தொழிற்சாலைக்கென்று தனிக்கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் விபத்துகள் நடக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தொடர்ந்து விபத்து நடப்பது ஏற்புடையதாக இல்லை. ஓமலூர் பட்டாசு விபத்தில் 4 பேரும், அதேநேரத்தில் விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்தில் 3 பேரும் பலியானது மிகவும் வேதனை அளிக்கிறது. அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களைப் பணையம் வைத்து வாழ்வாதாரத்திற்காக பட்டாசு ஆலைகளில் பணிக்குச் செல்கிறார்கள். அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் காப்பீடு (insurance), குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதே போல் பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துகள் இனிமேலும் நடக்காத வண்ணம் பாதுகாத்துக் கண்காணிக்க வேண்டும். மேலும் இறந்தவர்களுக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் ஆலை உரிமையாளர்கள் மற்றும் தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
